Automobile Tamilan

2027 முதல் டீசல் என்ஜின் கார்களுக்கு தடை .?

இந்தியாவில் 2027 ஆம் ஆண்டு 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பெருநகரங்களில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட 4 சக்கர வாகனங்களை பதிவு செய்யக்கூடாது. 2024 முதல் எலக்ட்ரிக் பேருந்துகள் பதிவு மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என இந்தியாவின் பெட்ரோலிய அமைச்சகத்துக்கு மாற்று எரிசக்தி ஆலோசனைக் குழு (Energy Transition Advisory Committee of India) அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Ban Diesel Vehicles

முன்னாள் பெட்ரோலியம் செயலர் தருண் கபூர் தலைமையிலான ஆலோசனைக் குழு, போக்குவரத்துக்கான ஒட்டுமொத்த வாகனங்களும் பேட்டரி மின்சார வாகனங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றது.

டீசலில் இயங்கும் 4 சக்கர வாகனங்களுக்கான பதிவு செய்வதற்கான தடையை 5 ஆண்டுகளில் அமல்படுத்த வேண்டும் என்றும், நகர்ப்புறங்களில் டீசலில் இயங்கும் மாநகரப் பேருந்துகளை இயக்குவதனை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

2024 ஆம் ஆண்டு முதல் பெருநகரங்களில் பயன்படுத்தப்படும் டெலிவரி வாகனங்களுக்கான அனைத்து புதிய பதிவுகளும் எலக்ட்ரிக் வாகனமாக மட்டுமே இருக்க வேண்டும், இதனால் டெலிவரி வாகனங்களில் 75% அடுத்த 10 ஆண்டுகளில் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மின்சாரமயமாக்கப்பட்ட வாகனங்களாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

அடுத்து, இந்திய ரயில்வே தனது தண்டவாளங்களை அதிவேகமாக மின்மயமாக்க வேண்டும். தேசிய சரக்கு போக்குவரத்தில் ரயில்வேயின் பங்கு 15 ஆண்டுகளில் தற்போதைய 23% லிருந்து 50% ஆக உயர வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில், நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் சமையல் எரிபொருளான எல்.பி.ஜியை பயன்பாட்டிற்கு மாற்றாக அழுத்தப்பட்ட உயிர்வாயு (biogas) மற்றும் ஹைட்ரஜன் போன்றவற்றுடன் கலக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

மாற்று எரிசக்தி ஆலோசனைக் குழுவின் (Energy Transition Advisory Committee) பரிந்துரைகளை அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெறுமா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் தற்பொழுது இல்லை.

Exit mobile version