Automobile Tamilan

சென்னையில் மின்சார பேருந்து சேவை விரைவில்..!

சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் சேவைக்கு மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகின்றது. ஆரம்பகட்டமாக அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மின்சார பேருந்துகள் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மின்சார பேருந்து

மிகவேகமாக மாறிவரும் பருவநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்கம் வகையில் மின்சார வாகனங்களின் மீதான உற்பத்தி திட்டங்களை அனைத்து மோட்டார் நிறுவனங்களும் சர்வதேச அளவில் மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சர்கயூட் என அழைக்கப்படுகின்ற மின்சார பேருந்துகள் முதற்கட்ட சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டத்தில் ஆரம்பகட்ட சோதனை ஓட்டம் திருப்திகரமாக உள்ளதால் சென்னை மெட்ரோ போக்குவரத்து சேவையில் வரும் காலங்களில் மின்சார பேருந்துகள் முக்கிய பங்காற்றும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சர்கியூட் மின்சார பேருந்துகள்

சர்கியூட் மின்சார பேருந்துகள் 35 முதல் அதிகபட்சமாக 65 இருக்கைகள் வரை பெற்ற வகைகளில் கிடைக்கின்றது. இந்தப் பேருந்துகள் அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டிருப்பதுடன், முழுமையான ஒருமுறை சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 120 கிமீ வரை பயணிக்கலாம்.

சர்க்யூட் மின்சார பேருந்துகளின் விலை ரூ. 1.50 கோடி முதல் ரூ.3.50 கோடி வரையிலான விலையில் கிடைக்கின்றது. இந்த பேருந்திற்கு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற உயர் ரக மின்கலன்கள் மொத்த பேருந்தின் விலையில் 60 சதவிகித பங்களிப்பை பெற்றுள்ளதாம்.

ஹிந்துஜா குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் கே தாசரி கூறியதாவது, இந்திய சாலைகள் மற்றும் சிறப்பான சுமை தாங்கும்திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள சர்கியூட் எலக்ட்ரிக் பேருந்துகள் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நவீன நுட்பங்களை பெற்று  உலகதரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள பேருந்துகள் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுக்கும் எற்றதாக இருக்கும் என கூறியுள்ளார்.

சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற ஆரம்பகட்ட சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில் சென்னை போக்குவரத்து கழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளும் சொகுசு பேருந்துகளாக மாற்றப்படும், மேலும் மின்சார பேருந்திற்கான சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ள நிலையில் தமிழக அரசு அதை நிரந்தர போக்குவரத்து ஊர்தியாக நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version