மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டணி ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக இரு நிறுவனங்களும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

இருநிறுவனங்களின் கூற்றுப்படி, உலகளாவிய பெருந்தொற்று நோய் தாக்கத்தால், கடந்த 15 மாதங்களில் உலகளாவிய பொருளாதார மற்றும் வணிக சூழ்நிலை மாற்றங்களை சந்தித்துள்ளது. இதனால் மூலதன ஒதுக்கீடு முன்னுரிமைகளை மறு மதிப்பீடு செய்ய ஃபோர்டு மற்றும் மஹிந்திராவின் தனி முடிவுகளை பாதித்துள்ளன.

மஹிந்திரா-ஃபோர்டு கூட்டணி

கடந்த அக்டோபர் 2019-ல், ஃபோர்டு மற்றும் மஹிந்திரா இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் மூலமாக இந்தியாவில் ஃபோர்டு கார்களை உருவாக்க, சந்தைப்படுத்த மற்றும் விநியோகிக்க ஒரு கூட்டு முயற்சியை உருவாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இப்போது, இரு நிறுவனங்களும் இந்த கூட்டு முயற்சியை நிறுத்த முடிவு செய்துள்ளன.

இந்த கூட்டணியின் மூலம் 7 கார்களை அறிமுக செய்யவும், இந்தியா மட்டுமல்லாமல் வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் அடிப்படையிலான ஃபோர்டு சி-எஸ்யூவி காரினை உற்பத்தி செய்யவும், இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்து, 2021 மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்ற புதிய ஈக்கோஸ்போர்ட் காரில் மஹிந்திராவின் 1.2 லிட்டர்  TGDI (G12) என்ஜின் இடம்பெற வாய்ப்புகள் இருந்தது. இந்த திட்டங்கள் மட்டும் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் உள்ளது.

எனவே, ஃபோர்டு இந்தியா முழுமையாக ஃபோர்டின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமாக தொடர்ந்து இயங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.