Automobile Tamilan

2018 ஆட்டோ எக்ஸ்போ-வை தவிர்க்கும் மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள்

இந்தியாவின் மிகப்பெரிய மோடார் வாகன கண்காட்சியாக விளங்கும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியை 6 கார் தயாரிப்பாளர்கள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்கள் பங்குபெறாமல் தவிர்க்கலாம் என கூறப்படுகின்றது.

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ

விற்பனை வீழ்ச்சி , செலவு குறைப்பு போன்ற நடவடிக்கைகளை பெரும்பாலான மோட்டார் நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்ற நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு வகையில் செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் வோக்ஸ்வேகன் இந்தியா, ஸ்கோடா இந்தியா, ஆடி இந்தியா ஆகிய மூன்று நிறுவனங்களும் நிசான் இந்தியா, ஃபோர்டு இந்தியா மற்றும் இந்திய சந்தையிலிருந்து வெளியேறும் ஜிஎம் செவர்லே ஆகிய 6 மோட்டார் கார் தயாரிப்பாளர்கள் பங்கு பெறமாட்டர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளர்களில் இந்தியாவைச் சேர்ந்த ராயல் என்ஃபீல்டு, பஜாஜ் ஆட்டோ உட்பட ஹார்லி டேவிட்சன் மற்றும் டுகாட்டி (ஃபோக்ஸ்வேகன் குழுமம்) ஆகிய நான்கு நிறுவனங்களும் பங்கேற்பதனை தவிர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மோட்டார் ஷோ கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்கள் ரூ.50 முதல் ரூ.60 கோடி வரை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளதால், செலவுகளை குறைப்பதற்கான நடவடிக்கையாக இது கருதப்படுகின்றது.

அடுத்த ஆண்டில் நடைபெற்ற உள்ள ஆட்டோ ஷோவில் எம்ஜி மோட்டார்ஸ், கியா, மற்றும் பீஜோ ஆகிய நிறுவனங்கள் புதிதாக பங்கேற்க வாய்ப்புகள் உள்ளது.

இந்திய மட்டுமல்ல சர்வதேச அளவில் நடைபெறும் பிரசத்தி பெற்ற மோட்டார் கண்காட்சி அரங்குகளில் பெரும்பாலான முன்னணி வாகன நிறுவனங்கள் பங்கு பெறுவதனை தவிர்த்து வருகின்றன. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ராயல் என்ஃபீல்டு, பஜாஜ் ஆட்டோ மற்றும் ஹார்லி டேவிட்சன் ஆகிய மூன்று நிறுவனங்களும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.

நன்றி – லைவ்மின்ட்

Exit mobile version