Automobile Tamilan

BS4 வாகனங்களை பதிவு செய்யலாம்..! ஆனால் : உச்சநீதிமன்றம்

கோவிட்-19 ஊரடங்கு காரணமாக பிஎஸ்-4 வாகன விற்பனை மார்ச் மாத இறுதி வாரத்தில் பாதிப்படைந்தது. இந்நிலையில், சில விதிமுறைகளுடன் உச்சநீதிமன்றம் வாகனங்களை விற்பனை செய்ய அனுமதித்தது. ஆனால் அனுமதி வழங்கப்பட்ட வாகனங்களை விட கூடுதலான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டதால் பிஎஸ்-4 வாகனங்களை மறு உத்தரவு வரும் வரை ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்ய தடை விதித்திருந்தது.

கோவிட்-19 ஊரடங்கிற்கு முன்னர் விற்கப்பட்ட பிஎஸ் 4 வாகனங்களை மட்டுமே பதிவு செய்யவும் அல்லது வாகனங்களின் விவரங்களை eVahan வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளவை மட்டுமே ஆர்டிஓ அலுவலகங்களில் வாகனப் பதிவுகளை மேற்கொள்ள இயலும் என உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், புதிய உத்தரவின் படி, நாட்டில் விற்பனை செய்யப்பட்ட 39,000 பிஎஸ்-4 வாகனங்கள் பதிவு செய்ய இயலாத நிலை தொடர்ந்து நீடிக்கின்றது. மேலும் மார்ச் 31க்கு பிறகு விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கும் தடை தொடருகின்றது.

அதாவது இ-வாகன தளத்தில் பதிவேற்றப்படாத அல்லது மார்ச் 2020-க்கு பின்னர் விற்பனை செய்யப்பட்ட பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்ய இயலாது.

மார்ச் 12 முதல் மார்ச் 31, 2020 வரை 1.34 லட்சம் பிஎஸ்4 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பு (FADA) அறிக்கை கூறுகின்றது. இருப்பினும், அதே நேரத்தில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் விற்கப்பட்டதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

2.34 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்ய FADA கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் மொத்த எண்ணிக்கையில் FADA-வில் உறுப்பினர்கள் அல்லாதவர்களின் எண்ணிக்கையும் அடங்கும். ஆனால் சில டீலர்ஷிப்கள் விற்பனை விபரத்தை வெளியிடவில்லை. மேலும், இந்த ஆண்டு மார்ச் 29-31 வரை மூன்று நாட்களில் மட்டும், நாட்டில் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் விற்கப்பட்டதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 31, 2020-க்கு முன்னர் விற்கப்பட்ட 2.25 லட்சம் பிஎஸ்-4 வாகனங்களில், FADA வழங்கிய தரவுகளின்படி, 39,000 வாகனங்களை evahan தளத்தில் சரிபார்க்க முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதி மிஸ்ரா மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனிடம், “ஊரடங்கு காலகட்டத்தில் அதிக விற்பனை இருக்காது, ஆனால் ஊரடங்கு காலத்தில் காலத்தில் விற்பனை அதிகமாக உள்ளதே, ‘இது ஒரு மோசடி அல்லவா’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கான காரணத்தை FADA வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாத் ”உற்பத்தியாளர்கள் இருப்பில் உள்ள வாகனங்களை திரும்பப் பெற மறுத்ததால் தள்ளுபடிகள் மற்றும் பல்வேறு விற்பனை சலுகைகள் போன்றவற்றின் மூலம் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதை தெளிவுபடுத்த முயன்றார். மேலும், மே 31 வரை விற்கப்பட்ட பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்ய அனுமதிக்குமாறு அவர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

Exit mobile version