Automobile Tamilan

பிஎஸ் 6 மாருதி சுஸூகி டீசல் கார் விற்பனைக்கு கிடைக்கும்

இந்திய பயணிகள் வாகன சந்தையில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் பாரத் ஸ்டேஜ் 6 டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட கார்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் என மாருதி நிறுவன சேர்மேன் ஆர்.சி பர்கவா உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட சில மாடல்களில் மட்டும் விற்பனை செய்யபடும்.

சமீபத்தில் வெளியான புதிய சியாஸ் காரில் மாருதியின் 1.5 லிட்டர் DDiS 225 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் கொண்ட சியாஸ், எஸ் கிராஸ் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களில் மட்டும் டீசல் என்ஜின் கிடைக்கப்பெறும்.

மாருதி சுஸூகி டீசல் கார்

இந்தியாவின் முதன்மையான மாருதி சுஸூகி நிறுவன்ம், 2020 ஏப்ரல் முதல் டீசல் என்ஜின் கார்களை விற்பனை செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளது. குறிப்பாக பிஎஸ் 6 நடைமுறைக்குப் பின்னர் டீசல் என்ஜின் கார்களின் விலை பிஎஸ் 4 மாடலை விட ரூ. 60.000 முதல் ரூ.80,000 வரை சிறிய ரக கார்களின் விலை உயரும் என்பதனால் அதிரடி முடிவை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக இந்நிறுவனத்தின் கார்களில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த என்ஜினை பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு மாற்றும் எண்ணம் இல்லை என ஃபியட் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மாருதி நிறுவனம் ரூ.1000 கோடி முதலீட்டில் தயாரித்துள்ள 95 hp குதிரைத் திறன் மற்றும் 225 Nm முறுக்கு விசை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் DDiS 225 என்ஜின் முதற்கட்டமாக சியாஸ் காரில் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த என்ஜின் பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்பட உள்ளது. ஆனால் சந்தையின் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த என்ஜின் தயாரிக்கப்பட உள்ளது.

ஆட்டோகார் ப்ரோ தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ஆர்.சி பர்கவா குறிப்பிட்டுள்ள முக்கிய விபரங்கள் சில பின் வருமாறு, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக பெட்ரோல் கார்களை மட்டும் கொண்டிருந்த மாருதி சுஸூகி, சந்தையின் சூழல் காரணமாக டீசல் கார்களை நோக்கிய பயணத்தை துவக்கினோம். ஆனால், தற்போது மீண்டும் நாங்கள் பெட்ரோல் என்ஜின் நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாடுகளால் டீசல் என்ஜின் விலை அதிகரிப்பே முக்கிய காரணமாக உள்ள நிலையில் மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான என்ஜின் தயாரிப்பது மிக அவசியமாகின்றது.

மாருதி நிறுவனம் , பிஎஸ் 6 என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் மிக தீவரமாக செயல்பட்டு வருகின்றது. அடுத்த ஆண்டு முதல் மின்சார கார்களை விற்பனை செய்ய மாருதி சுஸூகி திட்டமிட்டுள்ளது.

Exit mobile version