தினமும் பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு உயரும் ?

வருகின்ற ஜூன் 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் பெட்ரோல் , டீசல் விலை தினந்தோறும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாறுதலுக்கு ஏற்ப தினமும் மாறுகின்ற வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளது.

தினமும் பெட்ரோல் டீசல் விலை

தற்போது பெட்ரோல், டீசல் விலை மாற்றம் 15 நாளுக்கு ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கடந்த மே 1ந் தேதி முதல் புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர்,  ஜெம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் என மொத்தம் 5 மாநிலங்களில் உள்ள 200 பங்க்குகளில் தினமும் மாறும் பெட்ரோலிய பொருட்களின் விலையை அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்பொழுது இந்த திட்டத்தின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து தயாரிக்கபட்டுள்ள அடிப்படையில் ஜூன் 16ந் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளிலும் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவுகின்ற கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படடையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் செய்யும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தும்.

இந்த முறை நடைமுறை வரும்பொழுது பெட்ரோல், டீசல் மற்றும் மற்ற பெட்ரோலிய பொருட்கள் விலையில் தினமும் சில பைசாக்கள் முதல் ரூபாய்கள் வரை குறையவும் அல்லது ஏறும். ஆனால் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்பில்லை, என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் இந்த முடிவினை தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.

இந்தியாவில் செயல்படுகின்ற மொத்த பெட்ரோல் நிலையங்களில் 95 சதவித பங்களிப்பை  பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெற்றுள்ளது. அதாவது நாட்டில் மொத்தமாக  56,190 பெட்ரோலிய டீலர்கள் செயல்படுவதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் கீழ் சுமார் 52,604 பங்க்குகள் செயல்படுகின்றது.

Exit mobile version