Automobile Tamilan

எலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா

mahindra xuv300 amt

மஹிந்திரா நிறுவனம், இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளராக விளங்கி வரும் நிலையில், eKUV100, எலக்ட்ரிக் XUV300 மற்றும் ஃபோர்டின் ஆஸ்பயர் செடான் அடிப்படையிலான மின்சார கார் என மொத்தமாக மூன்று எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட மஹிந்திராவின் முதல் காலாண்டின் நிதி அறிக்கையில், அடுத்த மூன்று முதல் மூன்றரை ஆண்டுகளுக்குள் மூன்று எலக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் குன்கா குறிப்பிட்டுள்ளார்.

முதல் மாடலாக மைக்ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக மஹிந்திரா எலக்ட்ரிக் கேயூவி 100 விற்பனைக்கு 2019 ஆம் ஆண்டின் இறுதியில், அதனை தொடர்ந்து எலக்ட்ரிக் XUV300 மாடல் 2020 ஆம் ஆண்டின் மத்தியிலும், 2021 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிகோ ஆஸ்பயர் செடான் ரக மாடலை அடிப்படையாக கொண்ட மஹிந்திரா எலக்ட்ரிக் பேட்ஜ் மாடலும் விற்பனைக்கு கொண்டு வர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால் மஹிந்திரா இ வெரிட்டோ விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது நாடு முழுவதும் 1,500-2,000 எலக்ட்ரிக் வெரிட்டோ கார்கள் சாலையில் இயங்கி வருகின்றதது. குறிப்பாக 200க்கு மேற்பட்ட இவெரிட்டோ 50,000 கிலோ மீட்டருக்கு கூடுதலான தொலைவு பயணித்துள்ளது.

நான்கு சக்கர வாகனங்கள் உட்பட இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பவர் ட்ரெயின் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Exit mobile version