E20 எனப்படுகின்ற எத்தனால் 20 சதவீதம் பெட்ரோல் கலப்பில் பரவலாக நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந்திய சாலைகளில் இயங்குகின்ற பெரும்பாலான இரு சக்கர வாகனங்கள் மற்றும் பெட்ரோல் கார்கள் சிக்கலை எதிர்கொள்வதாக வாகன ஓட்டிகள் புகார் எழுப்பி வரும் நிலையில் வழக்கம் போல இந்திய அரசு எந்த பாதிப்பும் வாகனங்களுக்கு ஏற்படாது என தெளிவுப்படுத்தி உள்ளது.
E20 Fuel Problems
குறிப்பாக இந்திய சாலைகளில் இயங்குகின்ற 2023க்கு முந்தைய வாகனங்கள் அதிகபட்சமாக E5, E10 வரை மட்டுமே எத்தனால் கலப்பினை கொண்ட பெட்ரோலை தாக்கு பிடிக்கும் என அதிகாரப்பூர்வமாக ஆட்டோமொபைல் வாகன தயாரிப்பாளர்கள் தங்களது மேனுவல் புத்தகங்களில் தெளிவுப்படுத்தியுள்ளனர். ஆனால் ARAI, SIAM அமைப்புகள் E20 பெட்ரோலை பயன்படுத்தி தாங்கள் சோதனை செய்த முடிவுகளில் எந்த பாதிப்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.
ஆனால், உண்மையில் பெரும்பாலான முன்னணி மெட்ரோ நகரங்களில் உள்ள வாகன ஓட்டிகள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் மைலேஜ் குறைவு, எரிபொருள் பம்ப் கோளாறு எஞ்சின் சார்ந்த கேஸ்கட் பாதிப்புகள், ஸ்டார்ட்டிங் தொல்லை சந்திப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, நிதின் கட்கரி 2018 ஆம் ஆண்டில் எத்தனால் கலந்தால் பெட்ரோல் விலை ரூ.55 ஆக குறையும், டீசல் விலை ரூ.50 ஆக என குறிப்பிட்ட செய்தி தற்பொழுது மீண்டும் வைரலாகி வருகின்றது.
ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் E20 பற்றி கூறுகையில்
டொயோட்டா நிறுவனம் தங்களது வாகனங்கள் பழைய வாகனங்கள் E20 எரிபொருளுக்கு ஏற்றதல்ல தங்கள் மேனுவலில் தெளிவாக குறிப்பிட்டபடி E10 வரை மட்டுமே ஆதரிக்கும் என தெரிவித்துள்ளது. ஸ்கோடா நிறுவனத்தின் இந்திய தலைவர் தனது ட்விட்டரில் எத்தனால் 20% பெட்ரோலுக்கு முந்தைய மாடல்கள் ஏற்றதல்ல என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஹோண்டா நிறுவனம் தங்களுடைய 2009க்கு பிறகு தயாரிக்கப்பட்ட அனைத்து கார்களும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஏன், இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளரான மாருதி சுசூகி 2023 ஆண்டுக்கு பிந்தைய தயாரிப்புகளே E20 எரிபொருளுக்கு ஏற்றது என தனது மேனுவலில் கொடுத்துள்ளது. நாட்டின் முன்னணி தயாரிப்பாளர்கள் ஹூண்டாய், டாடா, மஹிந்திரா, கியா என பல நிறுவனங்களும் மோட்டர் சைக்கிள் தயாரிப்பளர்களும் தங்களுடைய வாகனங்களை 2023க்கு பிறகு தான் மாற்றி அமைத்தனர்.
நமது இந்திய அரசு என்ன சொல்கிறது ?
ஆனால் இந்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதால் (E20) ஏற்படக்கூடிய எதிர்மறை தாக்கம் குறித்து, குறிப்பாக பழைய வாகனங்கள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தைப் பொறுத்தவரை, ஊடகங்களில் வெளியான சில கட்டுரைகள்/ அறிக்கைகள் கவலைகளை எழுப்பியுள்ளன. இருப்பினும், இந்தக் கவலைகள் பெரும்பாலும் ஆதாரமற்றவை மற்றும் அறிவியல் சான்றுகள் அல்லது நிபுணர் பகுப்பாய்வுகளால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.
மேலும், கார்புரேட்டர் அல்லது FI எஞ்சின் என இரண்டிலும் 1,00,000 கிலோமீட்டருக்கு சோதனை செய்த பொழுது எந்த பாதிப்பும் இல்லை என இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் (ARAI), இந்திய பெட்ரோலிய நிறுவனம் (IIP) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (R&D) ஆகியவற்றின் பொருள் இணக்கத்தன்மை மற்றும் ஓட்டுநர் திறன் சோதனைகள், E20 உடன் இயக்கப்படும் போது மரபு வாகனங்கள் குறிப்பிடத்தக்க மாறுபாடுகள், செயல்திறன் சிக்கல்கள் அல்லது அசாதாரண தேய்மானம் ஆகியவற்றைக் காட்டவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், E20 எரிபொருள் எந்த இயந்திர சேதமும் இல்லாமல் சூடான மற்றும் குளிர் தொடக்கத் திறன் சோதனைகளில் தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டுள்ளது.
📑Some articles/ reports in the media have raised concerns about the potential negative impact of 20% ethanol blending (E20) in petrol, particularly with regard to older vehicles and customer experience. These concerns, however, are largely unfounded and not supported by…
— Ministry of Petroleum and Natural Gas #MoPNG (@PetroleumMin) August 4, 2025
ஆனால் எத்தனால் 20 % உண்மை என்ன ?
பெரும்பாலான வாகன ஓட்டிகள் முதற்கட்டமாக மைலேஜ் குறைவதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அடுத்தப்படியாக வாகன தயாரிப்பாளர்களே தங்களுடைய மேனுவல் புத்தகங்களில் மிகவும் தெளிவுப்படுத்தியுள்ளனர் E10 வரை மட்டும் பாகங்கள் தாக்குப்பிடிக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்து, வாகனங்களில் நீண்ட கால அடிப்படையில் E20ஆதரவில்லாத வாகனங்களில் பயன்படுத்தும் பொழுது நிச்சியமாக எரிபொருள் பைப்லைன், எரிபொருள் டேங்க், கார்புரேட்டர் அல்லது FI ஆகியவற்றில் நிச்சியம் மிகப்பெரும் பிரச்சனைகளை சந்திக்கலாம், கூடுதலாக எஞ்சின் பாகங்களை நீண்ட கால அடிப்படையில் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதே உண்மை ஆகும்.