இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 2026 மாருதி சுசைகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார், பாரத் என்சிஏபி (Bharat NCAP) மோதல் பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் தரச்சான்றிதழைப் பெற்றுள்ள தகவலைப் பார்ப்போம்.
இதன் விரிவான பாதுகாப்பு மதிப்பீட்டுப் புள்ளிவிவரங்கள் இந்திய ஆட்டோமொபைல் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளன. பெரியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் (AOP) மொத்தமுள்ள 32 மதிப்பெண்களுக்கு 30.41 புள்ளிகளை அள்ளி இந்த கார் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, முன்பக்க மோதல் சோதனையில் (Frontal Offset Barrier Test) 16-க்கு 14.41 புள்ளிகளையும், பக்கவாட்டு மோதல் சோதனையில் (Side Deformable Barrier Test) முழுமையான 16-க்கு 16 புள்ளிகளையும் பெற்று, ஓட்டுநர் மற்றும் முன் சீட் பயணியின் தலை, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதிகளுக்கு மிகச்சிறந்த ‘குட்’ பாதுகாப்பு வழங்குவதை நிரூபித்துள்ளது.
குழந்தைகளுக்கான பாதுகாப்புப் பிரிவிலும் (COP) ப்ரெஸ்ஸா புதிய சாதனை படைத்துள்ளது. இதில் மொத்தமுள்ள 49 புள்ளிகளுக்கு 43 புள்ளிகளைப் பெற்று 5-ஸ்டார் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இதில் மிக முக்கியமாக, காரின் இயக்கத்தின் போது சோதிக்கப்படும் பிரிவில் 24-க்கு 24 முழு புள்ளிகளையும், குழந்தைகள் இருக்கை பொருத்தும் அமைப்பில் (CRS Installation) 12-க்கு 12 முழு புள்ளிகளையும் பெற்று அசத்தியுள்ளது.
18 மாதக் குழந்தை மற்றும் 3 வயதுக் குழந்தையை போன்ற டம்மி பொம்மைகளைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனைகளில், பின்பக்கம் நோக்கிய குழந்தைகளுக்கான சிறப்பு இருக்கை மூலம் இரண்டிற்குமே தலா 12-க்கு 12 புள்ளிகள் கிடைத்துள்ளன.
காரின் பாடி அமைப்பின் வலிமை மட்டுமின்றி, இதில் வழங்கப்பட்டுள்ள 6 ஏர்பேக்குகள், கார் நிலை தடுமாறுவதை தடுக்கும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள், முன் மற்றும் பின் பார்கிங் சென்சார்கள் மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் இந்த 5-ஸ்டார் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO போன்ற கார்களுக்குப் போட்டியாக, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையில் மாருதி நிறுவனமும் இடம்பிடித்துள்ளது.



